உள்ளூர் செய்திகள்

சங்ககிரி அரசு மருத்துவமனையில் அதிநவீன மானிட்டர் வசதியுடன் கூடிய டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பானுமதி தொடங்கி வைத்த காட்சி.

சங்ககிரி அரசு மருத்துவமனையில் அதிநவீன மானிட்டர் வசதியுடன் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடக்கம்

Published On 2023-10-19 12:55 IST   |   Update On 2023-10-19 12:55:00 IST
  • அரசு மருத்துவ மனையில் தினமும் வெளி நோயாளியாக 600-க்கு மேற்பட்டவர்களும், உள் நோயாளியாக 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • 12 டாக்டர்கள் மற்றும் 16 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சங்ககிரி:

சங்ககிரி அரசு மருத்துவ மனையில் தினமும் வெளி நோயாளியாக 600-க்கு மேற்பட்டவர்களும், உள் நோயாளியாக 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு, பாய்சன் ( விஷம்) பிரிவு, மாரடைப்பு, சாலைவிபத்து, பக்கவாதம், தீக்காயம், குழந்தைகள் அவசர பிரிவு, கலப்பு தீவிர சிகிச்சை, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தலைமை மருத்துவ அலுவலர் உட்பட 12 டாக்டர்கள் மற்றும் 16 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிநவீன மானிட்டர் வசதியுடன் கூடிய ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பானுமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து சங்ககிரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.சரவணகுமார் கூறுகையில்,

சங்ககிரி அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சம் மதிப்பில் அதிநவீன மானிட்டருடன் கூடிய 2 எந்திரங்கள் கொண்ட டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு இணை இயக்குனரால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி வசதியுடன் சிகிச்சை பெறும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் மாதம் 12 நோயாளிகளுக்கு இலவசமாக அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெரும் வகையில் வசதி உள்ளது. மேலும், இந்த பிரிவில் நோயாளிகள் அதிகமாக வரும் பட்சத்தில் கூடுதலாக ஒரு டயாலிசிஸ் எந்திரம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு தேவையான இடவசதிகளும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நோயாளிகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர். திருமாவளவன், டயாலிசிஸ் சிறப்பு மருத்துவர் முருகவேல், டாக்டர்கள் சிலம்பரசி, ராணி, வனிதா, சங்கர் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News