வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா
- தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
- இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி உட்கோட் டத்தில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் துரை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் காரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மனோசூரியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலைச்செல்வன், பொன்னுமலை, மாரியப்பன் மற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர் கவிதா, உதவிப்பொறியாளர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் 200 மரக்கன்றுகளும், அயோத்தியாப்பட்டிணம் – பேளூர்- கிளாக்காடு சாலை பகுதியில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.