உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை

Published On 2023-11-20 15:02 IST   |   Update On 2023-11-20 15:02:00 IST
  • பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது.
  • தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

சேலம்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

செயல் வீரர்கள் கூட்டம்

அந்த வகையில் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்க உள்ளார்.

ரூ.140 கோடி மதிப்பில் சாலை

இதேபோல் வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெண்ணந்தூர் அருகே மலைவாழ் மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான மல்லூர் அருகே மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு தங்குகிறார்.

கூட்டம்

தொடர்ந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சீலநாயக்கன் பட்டியில் காலை 10 மணியளவில் நடைபெறு கிறது. இதில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யா மொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டு திடல் ஆய்வு

இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர் செல்லும் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு அளிப்ப தற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News