18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்குஅமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- சின்னகடை வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
சேலம்:
சென்னை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுரைக்கிணங்க, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் தமிழரசி மற்றும் சேலம் தொழிலாளர் இணை கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் உத்தரவின்பேரில் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்)
கிருஷ்ணவேணி தலைமையில் காவல் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர், மேட்டூர் மற்றும் ஆத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் கந்தம்பட்டி பைபாஸ், அடிவாரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, சின்னகடை வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
எச்சரிக்கை
14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த தகவலை சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.