உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்

Published On 2022-09-04 14:05 IST   |   Update On 2022-09-04 14:05:00 IST
  • 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • கலெக்டர் அறிவிப்பு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மைனா மக்களின் பொருளாதாரத்தை பயன்படுத்தும் வகையில் டாம்கோ கடன் திட்டம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்வி கடன், கறவை மாடு வாங்க கடனுதவி மற்றும் ஆட்டோ கடன் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் கிராம புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருத்தல் வேண்டும். இத்திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

டாப்செட்கோ கடன் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டு மற்றும் சீர்மரபினர் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம், சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கான சிறு கடன் திட்டம் கறவை மாடு கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர் பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்தக் கடன் உதவி திட்டங்கள் தாய்கோ வங்கி, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

டாம்கோ மற்றும் டாப்செட்கோ திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), வங்கிகள் கூறும் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி, அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் 16-ந் தேதி, நெமிலி தாலுகா அலுவலகத்தில் 20-ந் தேதி, சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் 21-ந்‌தேதி, ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் 22-ந் தேதி, கலவை தாலுகா அலுவலகத்தில் 23-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. கடனுதவி பெற விரும்புவோர் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News