ரெயில்வே பாலத்திற்கு அடியில் ஆண் பிணம்
- உடல் அழுகிய நிலையில் இருந்தது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்- சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே கைனுர் (காடு)பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது அடித்துக்கொன்று சடலத்தை பாலத்திற்கு அடியில் வீசி சென்றார்களா ?அல்லது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?என்பது உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.