மாண்டஸ் புயலால் சேதமடைந்த விளை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
- விவசாயிகள் வலியுறுத்தல்
- 300 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கியது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் நெற்பயிரில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 9-ந் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்த போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி வட்டத்தில் கனமழை பெய்தது.
கனமழையால் நெமிலி வட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பின. மேலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆறு, கல்லாற்றில் அதிகளவில் தண்ணீர் வெள்ளமாக சென்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
இதனால் பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம், சிறுவளையம், கல்பலாம்பட்டு, வெளியநல்லூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன. விளை நிலங்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லா ததால் பயிர்கள் அழுகும் நிலை காணப்படுகின்றது.
நீரில் முழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் வருவாய் துறையினர் முறையான கணக்கெடுத்து தமிழக அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.