உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் தொங்கிய கல்லூரி மாணவன் சாவு

Published On 2023-07-22 14:22 IST   |   Update On 2023-07-22 14:22:00 IST
  • கல்லூரிக்கு சென்ற போது பரிதாபம்
  • ஆபத்தான பயணம் வேண்டாம்- ஏ.எஸ்.பி. வேண்டுகோள்

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தை சேர்ந்தவர் விஜய். தொழிலாளி. இவரது மகன் அஜய். (வயது 19) திருத்தணி அரசு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் அஜய் வீட்டிலிருந்து கல்லூரி சென்றார். பின்னர் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறினார். வெங்கடேசபுரம் அருகே வரும்போது படிகட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த அஜய் நிலை தடுமாறி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த அவரை, சக பயணிகள் மீட்டு சிகிச்சை க்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அஜய் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் கூறியதாவது:-

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்ய வேண்டாம்.

வீணாக சேட்டைகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சனைகளில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் அவரது பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதோடு, வேதனை அடைகின்றனர்.

இது போன்ற ஆபத்தான பயணங்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் பெற்றோர்களையும், கல்லூரியையும் நினைவில் கொண்டு கவனமாக பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News