உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும் மாநில அரசு-இணை மந்திரி குற்றச்சாட்டு

Published On 2022-07-09 09:00 GMT   |   Update On 2022-07-09 09:00 GMT
  • மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக இணை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
  • தமிழகத்தில் அந்த விபரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் கூறியதாவது:-

ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால் தாமதம் ஏற்படு கிறது. இந்த பிரச்னை ராமநாதபுரத்தில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்தோம். இது தொடர்பாக கூடுதல் கலெக்டரிடம் விசாரித்து விரைவில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூறியுள்ளேன்.

ஊராட்சிகளுக்குரிய நிதி ஒதுக்கிய 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அதனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மாநில நிதியில் அபராத வட்டி செலுத்தி அதனையும் ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும். மராட்டிய மாநிலத்திற்கு இவ்வாறு அபராதம் விதித்துள்ளோம்.

ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்க வலியுறுத்துகிறோம். ராமநாதபுரத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும். அதனை பெறுவதற்கு முன்பாக நிறைய இடங்களில் வெறும் குழாய் மட்டும் பதித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளது. அதனை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் அந்த விபரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் பொன்.கணபதி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், பொருளாளர் தரணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News