உள்ளூர் செய்திகள்

கருகிய பயிர்களுடன் கோரிக்கை விடுத்த விவசாயிகள்.

வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

Published On 2023-01-07 06:19 GMT   |   Update On 2023-01-07 06:19 GMT
  • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • நெற்பயிர்கள் கருகிய விளைநிலங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்ட த்தின் ஒரு பகுதி வைகை ஆற்றை நம்பியும், மற்றொரு பகுதி வானம் பார்த்த பூமியாகவும் உள்ளது. வைகை ஆற்றில் அதிகளவில் நாணல்கள், கருவேல மரங்கள் இருப்பதாலும், கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும் கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால் வைகை ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாண்டிகண்மாய், மஞ்சூர், வடநாடு, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் வானம்பார்த்த பூமியாக உள்ளன. இங்கு விதை தூவுதல் முறையில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது. வரத்து கால்வாய் தூர்வாரப்படாததால் பாண்டிக்கண்மாய், கிராம கண்மாய்க்கு கடந்த 7 வருடங்களாக தண்ணீர் செல்லவில்லை. விலை நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து வறண்டு காணப்படுகிறது.

நெற்பயிர்கள் கருகிய விளைநிலங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது கருகிய நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகிய விளைநிலங்கள் குறித்து வருவாய்த்துறை, புள்ளியல் துறை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதேபோல் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News