உள்ளூர் செய்திகள்

கல்லூரி கனவு திட்டம் தொடக்க விழாவில் இடம் பெற்ற கண்காட்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-07-03 11:27 GMT   |   Update On 2022-07-03 11:27 GMT
  • தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
  • பெற்றோர்கள் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

கீழக்கரை

கீழக்கரையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி நடந்தது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் கனவில் உதித்த "கல்லூரி கனவு" திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாகும். கல்விக்காக இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முறையே 5, 7 மற்றும் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டம் என்று அழைப்பதற்கு மாறாக முன்னேறி வரும் மாவட்டம் என்று அழைப்பதே சிறந்தது.

பெற்றோர்கள் மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் கல்வியறிவை பெற அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பு தரும் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு கல்வி கற்று முன்னேற வேண்டும்.

உன்னால் முடியும் தம்பி என்று அண்ணா கூறியது போல் மாணவர்களால் முடியாதது எதுவும் இல்லை. பெண்களிடம் வரவேற்பை பெற்ற இலவச பஸ் பயணம் மூலம் நாள்தோறும் 62 சதவிகிதம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.தொழில் துறையில் தமிழகம் 17-வது இடத்தில் இருந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் உள்ளாட்சி தேர்தலில் 98 சதவிகிதம் திராவிட மாடல் அரசு வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News