உள்ளூர் செய்திகள்

ஆதி திராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-03 12:06 IST   |   Update On 2023-08-03 12:06:00 IST
  • ஆதி திராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

சென்னை தரமணியில் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேட்டரிங் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓட்டல் மேனேஜ்மெண்ட்டில் கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓட்டல் மேலாண்மை நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, 1½ ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பு, மேலும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1½ ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, ஹவுஸ் கீப்பிங் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பில் விண்ணப்பிக்கலாம்.

படித்து முடித்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

இந்த பயிற்சியில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான செலவுகளை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஆரம்ப கால ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக இந்த திட்டத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News