உள்ளூர் செய்திகள்

64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி

Published On 2023-06-19 07:47 GMT   |   Update On 2023-06-19 07:47 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • கல்வித்தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர்.

இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலை பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆக மொத்தம் 64 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றதே இதற்குக் காரணமாகும்.

தற்போது இந்த 64 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் கள் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவால் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. அதனால் தலைமை யாசிரியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை.

நிரந்தர தலைமையாசிரியர் இல்லாமல் பள்ளிகள் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் 10-ம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஆனால்

கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்தது. மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடத்திற்கு பின் தங்கியது. கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்தி ருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏற்கனவே கல்வித்தரத்தில் பின்தங்கி வரும் நிலையில், 64 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக கல்வி அமைச்சர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News