உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நண்டு, மீன்கள்.

புரட்டாசி மாதம் எதிரொலி : திண்டுக்கல்லில் மீன்கள் விலை கடும் சரிவு

Published On 2023-10-04 07:25 GMT   |   Update On 2023-10-04 07:25 GMT
  • புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
  • புரட்டாசி மாதம் என்பதால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் பருவமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்கிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் திண்டுக்கல்லுக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதும் புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

வழக்கமாக புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் மீன்கள் விலையும் பாதியாக குறைந்துள்ளது. ரூ.400-க்கு விற்ற நகரமீன்கள் ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதேபோல் விளாமீன் ரூ.250-க்கும், ரூ.1000-க்கு விற்ற வஞ்சரம் ரூ.600-க்கும் விற்பனையானது. இறால் ரூ.450, புளூ நண்டு ரூ.450 என்ற விலையில் விற்பனையானது. மீன்கள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News