மத்திய அரசின் திட்டப்பணிகளை அலுவலர்கள் உரிய முறையில் மக்களிடம் சேர்க்க வேண்டும் - மத்திய மந்திரி அறிவுரை
- மத்திய அரசின் திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
- பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகளை அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்
புதுக்கோட்டை ;
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில் மோேரஸ்வர் படேல் தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டில், மாநில அரசால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஊரக வளர்ச்சித்துறை, வோண்மைத்துறை, கால்நடைத்துறை, பொது சுகாதாரத்துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம், உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின், இ-பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா, இ-தூய்மை பாரத இயக்கம், ஸ்வட்ச் பாரத் மிஷன் கிராமின், இ-ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான், இ-சான்சாடு ஆதார்ஸ் கிராம் யோஜனா போன்ற திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசின் திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். எனவே பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகளை அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக மத்திய மந்திரி அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை ஊராட்சி, நரிக்குறவர்காலனியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அறந்தாங்கி ஒன்றியம், ராஜேந்திரபுரத்தில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வீடற்ற ஏழை மக்களுக்காக பயனாளி பங்களிப்புடன் கூடிய அறந்தாங்கி திட்டப்பகுதியில் ரூ.11.40 கோடி மதிப்பீட்டில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ரேவதி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சம்பத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.சகிலா பீவி, உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.