கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி
- கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
- 222 வீரர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி தாலுகா வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவினையொட்டி பாய்மரப்படகு போட்டி நடைபெறும்.
இந்தாண்டு நேற்று நடைபெற்ற படகு போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 37 பாய்மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன. ஒரு படகிற்கு 6 வீரர்கள் வீதம் 222 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.ஒரு படகிற்கு ஒரு சொருகு பலகை, ஒரு கடல் பலகை, ஒரு பாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருந்தது.
மேலும் போக,வர 12 கிலோ மீட்டர் தூரம் பந்தைய எல்லை நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது.போட்டி தூரத்தை கடக்க வீரர்கள் ஒருவரையொருவர் தங்கள் படகை முந்தி செலுத்தியது காண்போருக்கு மிகவும் உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.படகு போட்டியை ஏராளமான ரசிகர்கள் , பொதுமக்கள் கடற்கரையோரம் நின்று ரசித்தனர்.50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.