கறம்பக்குடி அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்; 5 பேர் படுகாயம்
- கறம்பக்குடி அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
- இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்பு கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கறம்பக்குடியில் நடைபெற்ற அவர்களது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு ஆட்டோவில் அம்புக்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அனுமார் கோவில் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு வந்து கொண்டிருந்த அரசு டவுண் பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராணி (வயது 38), சேகர் (40), பாலையா (45), மாரிமுத்து (60) மற்றும் ஆட்டோ டிரைவர் ராஜா (42) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.