கந்தர்வகோட்டை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை
- கந்தர்வகோட்டை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
- விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்று தங்களது வங்கி கணக்கில் அதற்கான தொகையை பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை அரசு கிட்டங்கிகளுக்கு அனுப்பாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் மழையிலும் வெயிலிலும் தற்போது அடிக்கும் சூறைக்காற்றிலும் நெல்மணிகள் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.
மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். பல்வேறு காரணங்களைச் சொல்லி கொள்முதல் செய்வதை தாமதப்படுத்தாமல் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.