- புதுக்கோட்டை அருகே மது போதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்
- தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வடவாளம் கதுவாரிப்பட்டி அம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தீபாவளி பண்டியை கொண்டாடினார். இரவு நண்பர்களுடன் சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது வீட்டினர் அக்கம்பக்கத்தில் தேடினர். எனினும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சேகர் என்பவரது வயல் பகுதியில் தலையில் கல்லால் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் மதுபாட்டில்கள் கிடந்தன.
இதை அந்த பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் எஸ்.ஐ. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது
தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கலிய மூர்த்தி தீபாவளி கொண்டாட்டத்தின்போது தனது நண்பர்கள் 4 பேருடன் மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சேகர், அரங்கன், முருகன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட கலியமூர்த்திக்கு சாமியம்மாள் என்ற மனைவியும், யாழினி என்ற மகளும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.