உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே அரசு வாகனம் மோதி 2 பேர் பலி

Published On 2022-09-07 08:20 GMT   |   Update On 2022-09-07 08:20 GMT
  • ராமநாதன், ராஜகுரு நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
  • அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கம்பசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 26) தனியார் பேருந்து நடத்துனர், ராஜகுரு (23) கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு, ராஜகுரு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகுடி போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுதுது சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News