சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
- போதிய வடிகால் வசதி, கழிவுநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
- சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே பள்ளியேரி கிராமம் உள்ளது. இங்கு உள்ள பரிசுத்தம் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் போதிய வடிகால் வசதி, கழிவு நீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தரமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, சாலை வசதி செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தஞ்சை - பூதலூர் சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள். நாங்களும் அதிகாரிகளிடம் பேசுகிறோம் என்றனர்.
இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.