மாணவியை திட்டிய பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது
- நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
- மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவி ஒருவர் கடந்த மார்ச் 23-ந் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பல்கலைக்கழக வராண்டாவில் நின்று கொண்டிருந்தபோது என்னை பார்த்து வரலாற்று துறை பேராசிரியர் சண்முக ராஜா, என்னை சாதியை சொல்லி திட்டியும், என் உருவத்தை கேலி செய்தும் பேசினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் சண்முகராஜா மாணவியை சாதியை சொல்லி திட்டியது உறுதியானதால் அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சண்முகராஜா மீது மாணவிகள் தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.