வரி பாக்கி செலுத்தாததால் தனியார் திருமண மண்டபத்திற்கு சீல்
- கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.
- வருகிற, 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி ரூ.3 கோடியே 65 லட்சமும், குடிநீர் கட்டணம் பாக்கி ரூ.3 கோடியே 3 லட்சமும், பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.81 லட்சம் உட்பட ரூ.7.50 கோடி மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரி பாக்கியை பலர் செலுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.
நிலுவைத்தொகையான ரூ.3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608-&ஐ வருகிற, 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று வரை நிலுவை வரி தொகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் தனியார் மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் நகராட்சியில் வரி பாக்கி நிலுவையுலுள்ள அனைவரும் உடனடியாக வரியை கட்டுமாறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.