சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- பரமத்திவேலூர் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பரமத்திவேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தி பெருமானுக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.