ஹோலி பண்டிகை - மதுரையில் இருந்து கான்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
- கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும்.
- 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.
மதுரையில் இருந்து கான்பூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய பகுதிகளுக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, வடமாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் நடந்து வந்த தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரெயில்கள் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மதுரை-கான்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.01927) இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் சிறப்பு ரெயில் (வ.எண்.01928) வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் மதுரையில் இருந்து இயக்கப்படும்.
இதில் கான்பூர்-மதுரை ரெயில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக் கிழமைகளில் காலை 7.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் ரெயில் வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும், பொக்ராயன், ஓரை, ஜான்சி, லலித்பூர், பினா, போபால், இட்டார்சி, நாக்பூர், சந்திராபூர், பல்ஹர்சா, சிர் பூர், ராமகுண்டம், வாரங்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல். நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டு, 4-மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3-மூன்றடுக்கு எகனாமி குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7-இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும்.