உள்ளூர் செய்திகள்

கோவையில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி- திரளானவர்கள் பங்கேற்பு

Published On 2023-08-30 09:06 GMT   |   Update On 2023-08-30 09:06 GMT
  • 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.
  • ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

கோவை.

ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தன்று பழைய பூணூலை மாற்றி விட்டு புது பூணூலை அணிந்து கொள்வது வழக்கம்.

கோவையில் ராஜா வீதியில் உள்ள சங்கர மடம், ராம் நகரில் உள்ள ராமர் கோவில், மற்றும் சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.

விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் உபநயனம் பெற்ற பிராமணர்கள் தங்கள் பூணூல்களை மாற்றி வேத ஆகமங்களின் படி வழிபட்டனர். முன்னதாக வேத மந்திரங்கள் ஓத, கணபதி ஹோமமும் நடந்தது.

ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பவுர்ணமி அன்று வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர்.

முன்னோர்களின் வழி பாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

Tags:    

Similar News