சிறுவனை தாக்கிய ஊர்க்காவல் படை வீரர் கைது
- அந்த குடும்பத்தில் உள்ள சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான்.
- இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டியதால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராஜப்பா பூங்கா அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர்.
இந்த பூங்காவில் ஒப்பந்த ஊழியராக தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்த கந்தசாமி (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தஞ்சை மாவட்ட ஊர்க் காவல்படையிலும் பணிபுரிகிறார். இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை ரோடு மின்வாரிய காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பூங்காவுக்கு வந்திருந்தனர்.
அப்போது அந்த குடும்பத்தில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி அந்த சிறுவனை தாக்கி உள்ளார். இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டினார்.
இதனால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.