உள்ளூர் செய்திகள்

தையல் கடை பெண் உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு

Published On 2022-06-24 08:16 GMT   |   Update On 2022-06-24 08:16 GMT
  • தையல் கடை பெண் உரிமையாளர் வீட்டில் பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
  • சாவியை பூட்டி வெளியே வைத்துள்ளார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன், தபால் நிலைய ஊழியர். இவரது மனைவி லாலி (வயது 44). இவர் பெரம்பலூரில் தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் லாலி வீட்டை பூட்டி விட்டு தையல் கடைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மாலை லாலியின் மகன் ஹரி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ஹரி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விசாரணையில், லாலி வீட்டின் சாவியை பூட்டி வெளியே வைத்து விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், சாவியை எடுத்து வீட்டை திறந்து, பீரோவையும் திறந்து, அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்." 

Tags:    

Similar News