உள்ளூர் செய்திகள்

வாலிபரை துப்பாக்கியால் சுட்ட கொலை செய்தவர் கைது

Published On 2023-03-29 12:38 IST   |   Update On 2023-03-29 12:38:00 IST
  • கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் வெறிச்செயல்
  • கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்

பெரம்பலூர்,

மங்களமேட்டை அடுத்துள்ள நம்பியூர் கிராமத்தில் உள்ள நரியோடையை சேர்ந்த அல்லித்துரையின் மகன் அஜித்(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வதாக அஜித் திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரஜினிக்கும்(45), அஜித்துக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.அப்போது ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமமின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை அஜித்தின் உறவினரான ஒரு பெண் கண்டித்ததோடு, மற்றவர்களிடம் இது பற்றி தெரிவித்ததாகவும், இதனால் அந்த பெண்ணுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டபோது, அவரை அஜித் தட்டிக்கேட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரஜினியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News