பெரம்பலூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை
- பெரம்பலூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை போனது
- ஜன்னலை வலைத்து மர்மநபர்கள் கைவரிசை
பெரம்பலூர்,
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே சங்குப்பேட்டை சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சாகித் அப்ரிடி (வயது 25). இவர் எளம்பலூர் சாலையில் ரோஸ் நகரில் வாடகை வீட்டில் தனது தந்தை சையது முகமது, தாயார் குர்ஷிதா யாஸ்மினுடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குர்ஷிதா யாஸ்மின் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்று விட்டார்.சம்பவத்தன்று சாகித் அப்ரிடி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை சையது முகமதுவை அழைத்துக்கொண்டு ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இரவு சாகித் அப்ரிடி தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.