நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் அலுவலர்கள்-விவசாயிகள் கடும் வாக்குவாதம்
- நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் அலுவலர்கள்-விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக புஜங்கராயநல்லூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்ததால் விவசாயிகள் அங்கு சென்றனர்.
ஆனால் அங்கு விவசாயிகள் அமருவதற்கு போதிய அளவு இடவசதி, இருக்கை வசதி இல்லை. கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டம் தொடங்கப்படாததால் விவசாயிகளுக்கும், ஆர்.டி.ஓ. அலுவலக அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தாமதமாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புஜங்கராயநல்லூர் கிராம விவசாயிகள் எங்கள் கிராமத்தில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டாம். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.