உள்ளூர் செய்திகள்

பெ.நல்லூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2023-07-10 12:55 IST   |   Update On 2023-07-10 12:55:00 IST
  • பெ.நல்லூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அகரம்சீகூர்,


பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பெ.நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி நாள்தோறும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. மேளம் தாளம் முழங்க ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோடும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறைவு பெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு மங்களமேடு போலீசார், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News