- தனிமையின் கொடுமையால் பரிதாபம்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது75). இவரின் மனைவி செல்லம்மாள். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணேசன் தனது அக்காள் மகனை, தனது மகனாக பாவித்து அன்பு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது சொத்துக்களை தனது அக்காள் மகனுக்கு எழுதி வைத்து உள்ளார்.இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக மனைவி இறந்து விட்டார். சொத்துக்கள் கைமாறிய உடன் மகனாக நினைத்த, அக்காள் மகனும் இவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் தனிமையில் கணேசன் வாழ்ந்து வந்துள்ளார். துணைக்கு யாருமற்ற நிலையாலும், முதுமையின் காரணமாகவும் உணவிற்கே அவர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனிமை அவரை தொடர்ந்து வாட்டியதால் மனமுடைந்த அவர் அப்பகுதியில் மனோகரன் என்பருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பாறை அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.