உள்ளூர் செய்திகள்

பொதுப்பாதையை தனியாருக்கு பட்டா செய்து கொடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-01 08:51 GMT   |   Update On 2023-02-01 08:51 GMT
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது
  • பொதுப்பாதையை தனியாருக்கு பட்டா செய்து கொடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த வடக்கு மாதவி ஏரிக்கரையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனியாருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாக கூறி, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், பட்டாவை ரத்து செய்து பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சிவானந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியில் அனைத்து நிலங்களையும் சர்வேயர் மூலம் நில அளவை செய்து, நிரந்தரமாக பொதுப்பாதைக்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இன்று (புதன்கிழமை) நிலத்தை அளக்க வரவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News