பெரம்பலூர் பைக் ஷோரூமில் திருடியவர் கைது - ரூ. 8 லட்சம் பணம் பறிமுதல்
- துரை என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.
- ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது.
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சி சேர்ந்த துரை (வயது51) என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி மணி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார் கொண்டு தனிப்படை அமைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுக்கொ ண்டிருந்தவரை போலீசார் பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோச்சடை பாண்டியன் (எ) பாண்டியன் என்பதும்,
இவர் தான் பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள பைக் ஷோரூமில் ரூ.10 லட்சம் பணத்தை பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.8.70 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.