2 வீடுகளில் 4 பவுன், ரூ.90 ஆயிரம் கொள்ளை
- 2 வீடுகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்
- 4 பவுன், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
பெரம்பலூர்.
குன்னம் தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளையும், மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது தொடர்பான புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே குருவாடிபட்டி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (வயது 38) என்பது தெரியவந்தது. இவர், நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோரது வீடுகளில் திருடியது தெரியவந்தது. பின்னர் மதியழகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.