உள்ளூர் செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது

Published On 2022-08-30 14:31 IST   |   Update On 2022-08-30 14:31:00 IST
  • விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவர் வெளியூரில் இருந்து வந்த தனது மகளை அழைத்து வர அரியலூருக்கு சென்றார். வழியில் அவரை மறித்த 7 பேர் கொண்ட கும்பல், இரும்பு ஆயுதங்களால் அவரை தாக்கி கொலை செய்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சிவசாமி, நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் செல்லதுரை(வயது 21), பாண்டியனின் மகன் பாலமுருகன்(21) மற்றும் 16 வயது சிறுவன் என 3 பேரை நேற்று குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் கைது செய்தார். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்."

Tags:    

Similar News