உள்ளூர் செய்திகள்

பஸ் கிடைக்காமல் சரக்கு வாகனத்தில் சென்ற மக்கள்- பரனூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவு வரை காத்திருந்தனர்

Published On 2023-09-17 07:08 GMT   |   Update On 2023-09-17 07:08 GMT
  • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
  • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

செங்கல்பட்டு:

விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News