உள்ளூர் செய்திகள்

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து மறியல்

Published On 2022-12-15 16:48 GMT   |   Update On 2022-12-15 16:48 GMT
  • மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சுடுகாடு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

அரண்வாயல்குப்பம்:

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரண்வாயல்குப்பம். இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பம்மல் (எ) சிவா(50) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுடுகாடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுடுகாடு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரண்வாயில்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சந்திப்பு பகுதியில் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.

Tags:    

Similar News