பள்ளி குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
பழனி அருகே அதிவேகமாக செல்லும் லாரிகளை கண்டித்து மாணவர்களுடன் மக்கள் மறியல்
- காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சமயங்களில் மின்னல் வேகத்தில் லாரிகள் செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
- லாரி டிரைவர்களிடம் காலை நேரத்தில் லாரிகள் உள்ளே வரக் கூடாது. பள்ளி சமயத்தில் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக அதிக அளவு லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் ஊருக்குள் அதிக வேகத்தில் ெசல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சமயங்களில் மின்னல் வேகத்தில் லாரிகள் செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் லாரிகள் செல்லும் போது புழுதி பறக்க விட்டு செல்வதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில் லாரிகள் ஊருக்குள் வருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். லாரி டிரைவர்களிடம் காலை நேரத்தில் லாரிகள் உள்ளே வரக் கூடாது. பள்ளி சமயத்தில் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.