உள்ளூர் செய்திகள்

முல்லைப்பெரியாறு அணைபகுதியில் நடமாடும் புலிகளை படத்தில் காணலாம்.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2023-08-20 12:29 IST   |   Update On 2023-08-20 12:29:00 IST
  • சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றும் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.
  • புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும்

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை உபரி நீர் செல்லும் வல்லக்கடவு, வண்டிபெரியாறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. இந்த பகுதியில் தாய் மற்றும் 2 குட்டிகள் என 3 புலிகள் சுற்றித் திரிந்தன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றனர். ஆனால் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தனர். அந்த சத்தத்தை கேட்டு 3 புலிகளும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், புலிகள் நடமாடும் இடம் பெரியாறு அணை உபரி நீர் செல்லும் பகுதியாகும். வண்டி பெரியாறு, பீர்மேடு, குமுளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.

இதனால் குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் புலிகளை கண்காணித்து வந்தாலும், பொதுமக்களின் அச்சம் குறையவில்லை. புலிகள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.

Tags:    

Similar News