தஞ்சை மணிமண்டபம் பூங்காவில் குவிந்த மக்கள்
- விடுமுறை நாள் என்பதால் மணிமண்டப பூங்காவில் வழக்கத்தை விட பொதுமக்கள் குவிந்தனர்.
- குழந்தைகள் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
மேலும் ஆயுத பூஜை , விஜயதசமியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இப்படி தொடர் விடுமுறை காரணமாக தஞ்சையில் உள்ள புகழ் பெற்ற மணிமண்டப பூங்காவில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
தஞ்சை நகர் மட்டுமல்லாத சுற்றி உள்ள ஏராளமான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் மணி மண்டப பூங்காவுக்கு வந்தனர்.
இதேபோல் பெரிய கோவிலுக்கு வந்திருந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மணிமண்டப பூங்காவுக்கு வந்து சுற்றி பார்த்தனர்.
ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அங்கு உள்ள ஊஞ்சலில் குழந்தைகள் உற்சாகமாக ஆடினர். மேலும் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.
இதேபோல் பெரிய கோவிலிலும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து கட்டிட கலையை பார்த்து ரசித்தனர்.
பெரிய கோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட பலவற்றை பார்த்து ரசித்தனர். செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.