சூலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
- 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக குற்றச்சாட்டு
- போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு
சூலூர்
சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பாக அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இன்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், குடி தண்ணீருக்காக நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 40 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.
குடிதண்ணீருக்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த போராட்டத்தால் 300க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றன.