உள்ளூர் செய்திகள்

வைகாசி விசாகத்தையொட்டி செங்கோட்டை- நெல்லை ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும்- பயணிகள் கோரிக்கை

Published On 2022-06-06 13:36 IST   |   Update On 2022-06-06 13:36:00 IST
  • பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
  • திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வீ.கே.புதூர்:

இந்த ஆண்டு வைகாசி விசாக திருநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் குடம் எடுத்தும், பாதயாத்திரையாக சென்று வழிபடுவார்கள்.

இந்த நாட்களில் பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 8.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. அதன்பின்னர் பகல் முழுவதும் இந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே இந்த ரெயிலை காலை 9. 15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு 10.35 மணிக்கு சென்றடையும் வகையிலும், மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, நெல்லைக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிறப்பு ரெயிலால் செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த முருக பக்தர்கள் பயன் அடைவார்கள்.

Tags:    

Similar News