உள்ளூர் செய்திகள்

கோவிலில் பரிவேட்டை விழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

களக்காடு நடுச்சாலைப்புதூர் ஆதி நாராயணசாமி கோவிலில் பரிவேட்டை விழா

Published On 2022-07-09 08:50 GMT   |   Update On 2022-07-09 08:50 GMT
  • அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
  • 11-ம் நாளான வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 1-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்

. திருவிழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். தொடர்ந்து அய்யா கோவிலுக்கு எழுந்தருளினார். அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ, சிவ, அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

11-ம் நாளான வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News