பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பரமத்திவேலூர் பகுதிமுருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பால முருகன், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அணிச்சம் பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்,
ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.