பரமத்தி வேலூரில்வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி
- பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
- கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபிலர் மலை, செல்லப்பம்பாளையம், நகப்பாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில், மூலமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் இரண்டு பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 220 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 100 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 160 ரூபாய்க்கும், ரூ.300-க்கு விற்பனையான செவ்வந்தி தற்பொழுது ரூ
.250-க்கும், ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 200 ரூபாய்க்கும், ரூ.250-க்கு விற்பனையான ரோஜா தற்பொழுது ரூ.170-க்கும் ,ரூ.500 ரூபாய்க்கு விற்பனையான காக்கட்டான் ரூ.300-க்கும் விற்பனையானது.
பூக்கள் விலை சரிந்ததால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள்கூறுகையில், கோடை காலம் தொடங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும், அதனால் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லி பூ மேலும் விலை சரிவடையும். வருகிற வைகாசி மாதம் சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றனர்.