கிளியனூர் அருகே சாலை விபத்தில் நெல் அறுவடை எந்திர டிரைவர் பலி
- அய்யனார் கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார்.
- அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உருமன்குளத்தை சேர்ந்தவர் முருகையன் மகன் அய்யனார் (வயது 20). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் புதுவை மாநில கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார். வாரம் ஒருமுறை செஞ்சி அருகே உள்ள வீட்டிற்கு சென்று பெற்றோரை பார்த்து விட்டு பணிக்கு திரும்பிவிடுவார். அதன்படி நேற்று மாலை புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு சென்றார்.
புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் அருவாப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அய்யனாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.