விசாரணை கைதி மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
- இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்க முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்து விட்டன.
- நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் லாக்அப் மரணங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.