உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே மூதாட்டி கொலை- 50 கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடும் போலீஸ்

Published On 2022-08-07 10:19 GMT   |   Update On 2022-08-07 10:19 GMT
  • வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.
  • மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சூலூர்

சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜி(வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.

அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் இருந்த கோரை பாய் வியாபாரிகள் 3 பேர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாக உள்ளனர்.

இதனால் அவர்களை தேடி ஒரு தனிப்படை குழு தர்மபுரி விரைந்துள்ளது.தர்மபுரி மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு, தேடும் போலீசார் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கிறதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு தனிப்படை குழுவினர், காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மூதாட்டியின் கொலையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

இன்று அல்லது நாளைக்குள் குற்றாவளிகளை பிடித்து விடுவோம். மேலும் தனிப்படையினர் தொடர்ந்து தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News